எம் பாதை...
எம் பயணம்...
அத்தனையும்
நீ விட்ட வழி!
எம் பார்வை...
எம் நோக்கு...
அத்தனையும்
நீ தந்த விழி!
எம் வாழ்வின்
பக்கங்களை
நாங்களே செதுக்க...
உளி செய்து தந்தது நீ!
எமைத் தூக்கிச் சீராட்டி
நீ ரசித்ததைப் போல,
உன் பார்வை முதல்
பல்லால் மேலுதடு கடிக்கும்
உன் பழக்கம் வரை
ரசித்தபடியே வளர்ந்தோம்!
உலகை ரசிக்க
நீதான் கற்றுத் தந்தாய்!
உலகை ரசித்துக் கொண்டுமட்டும்
இராதே என்று நீயே சொன்னாய்!
கண்டதையும் படிக்காதே
என்று கண்டித்தாய்!
கடல்புறா படித்த போது
சாண்டில்யனிடம்
வர்ணனைகள் அதிகம்
என்று சலித்துக் கொள்வதுபோல்
பெய்து கொண்டிருந்த
மழையை
வாசலில் நின்று
ரசித்தபடி
நான் வாசிப்பதை
அங்கீகரித்தாய்!
அதே மழையில்...
கண்மாய் மீன்கள்
எதிர்த்து வரும்
என்று குடையில்
மீன்பிடிக்கக்
கற்றுக் கொடுத்தாய்!
பிடித்த மீன்களை
’பாவம்...’ என்று
மீண்டும் தண்ணீரில் விட்டு
பின்... மழையில்
ஏன் நனைந்தாய்
என்று நீயே வந்து
மருந்து கொடுத்தாய்!
கிறுக்கன் மாதிரி
பாடிக் கொண்டே
இருக்காதே என்பாய்!
பாடலை ரசித்துப் பாட
எங்களுக்குத் தெரியாமல்
பாடமெடுப்பாய்!
முரண்பாடாய் சிலருக்குத்
தெரிவாய் நீ!
எமக்கும் கூட சில நேரம்...!
உற்று நோக்கினாலோ
முற்றும் உணர்ந்தாலோ தான்
உணர முடியும்
உன்னையும்
உண்மையையும்.
’எதையும் திணிக்காமல்
ஆர்வம் விதைக்க...
எதிர்ப்பது போல்
நடிப்பது
நீ
கைக்கொண்ட
வித்தை’
என்பது தான்
என் ஆய்வின் துணிபு!
பட்டதைப் பட்டென்று
பேசும் உன் பழக்கத்தால்
நீ செய்த உதவிகளும்
பலருக்கு மறந்து போகும்!
அதில் உன் நற்குணம்
அவர்கள் பார்வையினின்று
மறைந்து போகும்!
நன்றியை எதிர்நோக்கி
நயந்து சிரிப்பதை விட,
உண்மையை வெளிக்காட்டுவதில்
ஒரு நட்டமுமில்லை என்பதை
உணர்த்துபவன் நீ!
’5 வயதில் வியந்து பார்த்தவன்
20 வயது எரிந்து பார்ப்பான்
40 வயதில் தான் மீண்டும் உணர்வான் தந்தையை!’
என்று பொது்வாய்ச் சொல்வார்கள்.
மாசிலா மனிதநேயத்தை
மாறா கொள்கை உறுதியை
உருக்காய் எம்மில்
ஊற்றினாய்!
மனிதத்தை விட
மாபெரும் சொத்தில்லை என
மனதில் நாட்டினாய்!
எமைத் தந்தாய்...
எம் அருமைத் தந்தாய்...
வாழ்க சிறந்து..!
வாழ்க.. வாழ்க!
கருத்துகள்