திராவிடர் திருநாள் - தமிழர் திருநாள் - உழவர் திருநாள் என்று நாம் கொண்டாடும் பொங்கல் விழாவை நல்ல நேரம் பார்த்து, சூரியனுக்குப் படைத்து, கும்பிட்டு, சங்கராச்சாரி கும்பல் சங்கராந்தி என்று விளிக்க ஏதோ இந்து மதப் பண்டிகையைப் போல மாற்றிவிட்டிருக்கிறார்கள். இந்தப் போக்கு தான் கிறிஸ்துவ, இஸ்லாமியர்கள் பலரை பொங்கல் விழாவிலிருந்து விலகி நிற்கச் செய்திருக்கிறது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் சமத்துவப் பொங்கல் என்று கொண்டாடி அனைத்து மத நம்பிக்கையாளர்களான தமிழர்களும் கொண்டாடும் வண்ணம் செய்தார். இன்றும் கூட பல இடங்களில் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
நாங்கள் பொங்கல் கொண்டாடுவோம் என்று சொல்லும்போது, என் சிறுபிள்ளையிலிருந்து பலரும் கேட்ட கேள்வி ‘நீங்க பொங்கல் கொண்டாடுவீங்களா?’ என்பது. அப்போது நாங்கள் சொல்லுவோம் “பொங்கல் மட்டும் தான் கொண்டாடுவோம். அது தான் எந்த மதமும் சாராதது. தமிழருக்கானது. உழைப்பின் உயர்வை நினைவூட்டுவது.” அவர்களின் கேள்வி - இது இந்து மதப் பண்டிகை என்ற எண்ணத்திலிருந்து எழுந்தது.
எனவே ஜாதி, மதம் சாராத மனிதநேய சமத்துவ விழாவாக வளர்த்தெடுப்பது தான் பொங்கலின் தனித்தன்மையைக் காப்பாற்றும். இது நம் விழா! இந்த ’நம்’ என்பது உழைக்கும் மக்கள் அனைவரையும் குறிப்பதாகும்
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு - திராவிடர் திருநாள் - பொங்கல் வாழ்த்துகள்!
கருத்துகள்