"இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இடஒதுக்கீடு கேட்பீர்கள்?"~ என்று கேட்கும் அயோக்கியர்களுக்கும், மடையர்களுக்கும் இது சுத்தமாகத் தெரியாது. நீங்களாவது தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய சுதந்திரத்திற்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல்முறையாக (1993) இடஒதுக்கீடு கிடைத்தது.
அதற்கு வி.பி.சிங் என்னும் பெருமகன் தன் பிரதமர் பதவியை பலி கொடுக்க வேண்டியிருந்தது.
அதுவும் வேலைவாய்ப்பில் மட்டும் தான்! அதற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தான், அதாவது 2006-இல் தான் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. அதையும் பிச்சுப் பிச்சுத் தான் போடுவோம் என்று சொல்லியும் இன்னும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை.
* கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாமல், வேலையில் முதலில் இட ஒதுக்கீடு தருதல் என்பதே கேள்விக்குரியது. முதல் படிக்கே வழி விடாமல், மூன்றாவது படியில் ஏறு என்பதைப் போல. அதையும் கடந்து தான் சிலர் ஏறினார்கள். ஆனால் அங்கேயும் உயர்ஜாதிக் கும்பல் இடத்தை விட்டுவைக்கவில்லை.
* முதல்முறையாக இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும்போதே, காலங்காலமாக பசியில் கிடந்து பந்தியில் அமர்ந்தவரின் பசியேப்பத்தை, ’நீ புளியேப்பக்காரன் உனக்கு இடம் கிடையாது’ என்று சொல்வதைப் போலத் தான் இருந்தது உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை. உணவுடனே உள்சென்று உயிரைக் குடிக்கும் கிருமியைப் போல, கிரீமி லேயர் என்று அரசியல் சட்டத்திலும் சமூக நீதியிலும் இல்லாத ஒன்றைப் புதிதாகத் திணித்து தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு அனுமதி தந்தது உச்சநீதிமன்றம்.
இதையெல்லாம் தாண்டி தான் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.
*******************************
பார்ப்பனரல்லாத இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் அறிக்கையை 1990-ல் பிரதமர் விபி.சிங் அமல்படுத்தியதன் காரணமாகத் தான் அவருடைய ஆட்சிக்குத் தந்த ஆதரவை விலக்கி ஆட்சியைக் கவிழ்த்தது பாரதிய ஜனதா கட்சி.
1990களில் நடந்த இந்திய அளவிலான மிகப்பெரிய சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கியது தான் மிக முக்கியக் காரணியாகும். பாபர் மசூதி - ராமர் கோவில் பிரச்சினையைப் பெரிய அளவில் பா.ஜ.க கையில் எடுத்ததும், அத்வானி ரத்த யாத்திரை சென்றதும் மண்டலை ஒழிப்பதற்காகத் தான்.
பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுத்துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்புதான் அரசு நிறுவனங்களை வேகவேகமாக தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அதாவது தனியார் மயமாக்குவதன் மூலம் இடஒதுக்கீடு வழங்காமல், பார்ப்பன ராஜ்ஜியத்தைத் தக்க வைக்கும் முயற்சிதான் இந்தியாவின் மூலதனத்தையே வெளிநாட்டவருக்கு விற்கும் முடிவுக்குக் காரணம்.
எப்படியாவது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவேண்டும்.. அதற்கு இந்த நாட்டையே காட்டிக் கொடுத்தாலும், காவு கொடுத்தாலும் பரவாயில்லை என்பது தான் எப்போதும் பார்ப்பனியத்தின் பண்பு. அதைத் தான் இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் தான் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை உதயமானது.
*******************************
இப்படி பல்வேறு சிக்கல்களைத் தாண்டியும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27%இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்ட கடந்த 22 ஆண்டுகளில்,
மத்திய அரசின் குரூப் ஏ பணியிடங்களில் 11.11% தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இடம்.
பொதுத்துறை வங்கிகளின் உயர்பதவிகளில் 1.15% தான் பிற்படுத்தப்படோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இன்னும் இட ஒதுக்கீடா என்று கேட்கிறார்கள் அயோக்கியர்களும், மடையர்களும்!
அரசியல் சட்ட ரீதியாகவே தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் அடிமட்டப் பணிகளில் தான் அவர்கள் நிரப்பப்படுகிறார்கள் என்பதும், உயர்பதவிகளை ஒட்டுமொத்தமாக பார்ப்பன உயர்ஜாதிக் கும்பல் தான் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது என்பதும் இன்னும் போராட்டத்திற்குரியவையாக இருக்கின்றன. பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்டோருக்குத் தான் இட ஒதுக்கீடு என்பதைப் போல கருதிக் கொண்டு, கோட்டாவில் வந்தவர்கள் என்று அவர்களைக் கேலி பேசும் மூடர் கூட்டமாக இல்லாமல், தங்கள் உரிமை நசுக்கப்படுகிறது என்ற சுரணையற்று, தங்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமை உள்ளது என்ற உணர்வும் அற்று, ஜாதி போதை தரும் மந்த புத்தியால் ஜாதிச் சேற்றில் உழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு விழிப்பு வர வேண்டிய காலம் இது.
தங்கள் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பார்ப்பன, உயர்ஜாதிக் கும்பல் தான் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளக் கூடாது என்பற்காகவே, இட ஒதுக்கீட்டையே கேலி பேசும் மனநிலைக்கு அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன பார்ப்பன ஆளும் வர்க்கமும், ஊடகங்களும்!
இதையெல்லாம் விட்டுவிட்டுத் தான், பிற்படுத்தப்பட்ட மக்களின் இயல்பான இந்து ஜாதி மனநிலைக்குத் தூபம்போட்டு அதை ஜாதி வெறியாக மாற்றும், ஜாதிவெறியூட்டும் வேலையை மட்டும் செய்வதற்காகவே தன் அடியாள் படையை அந்தந்த ஜாதிகளின் பெயரில் இறக்கிவிட்டிருக்கிறது இந்துத்வா.
இட ஒதுக்கீடு அமலாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் மறுக்கப்படும் உரிமையை மீட்டெடுக்கவும், மறைக்கப்படும் இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளைப் பெறவும் கடுமையான போராட்டத்தைச் செய்ய வேண்டிய அவசியம் பிற்படுத்தப்படோருக்கு இருக்கிறது. இந்திய அளவிலான களத்திற்குத் தொடக்கமாக தமிழகத்தை தயாரிக்கிறது திராவிடர் கழகம்.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்திலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சமூகநீதிக் களத்தில் ஜாதியில்லை; மதமில்லை; கட்சியில்லை; பேதமில்லை... ஒன்றுபடுவோம்... வென்றுவருவோம்!
கருத்துகள்
எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.மீதி இருப்போர் அத்தனை பேரும் முற்பட்ட இனத்தை சேர்ந்தவர்களா? அதற்கான சாத்தியமே இல்லையே .பெரும்பாலான சலுகைகளை வசதி படைத்த பிற்பட்ட இனத்தவர்தான் அனுபவித்து வருகிறார்கள்.அரசு பணிகளில் முற்பட்ட இனத்தை பார்ப்பதே அரிது.தரப்பட்டியலில் முன்னிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் பொதுப்போட்டியிலும் பின்னிலையில் உள்ளவர்கள் இடஓதுக்கீட்டிலும் சலுகை பெறுகிறார்கள் பாதிக்கப் பட்டவர்கள் முற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்தவர்களே. தமிழகத்ததில் உயர் அலுவலர்களின் எனக்குத் தெரிந்து முற்படுத்தப் பட்டவர் ஒருவரைக் கூட நான் பார்த்ததில்லை
Christo